தர்மபுரி: தர்மபுரி டவுன் அருகே இலக்கியம்பட்டியில் அனுமதியின்றி நடத்த முயன்ற பொங்கல் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சி தடை விதித்துள்ளது. இதையொட்டி, போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இலக்கியம்பட்டி பெருமாள் கோயில் முன்பு மாட்டு பொங்கலை முன்னிட்டு பொங்கல் மற்றும் கலைவிழா அனுமதியின்றி நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து தர்மபுரி டிஎஸ்பி வினோத் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொங்கல் விழா நடத்தக்கூடாது என தெரிவித்து, அனைவரையும் கலைந்து போக செய்தனர். இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னசாகரம் பகுதியில், பொங்கல் பண்டிகையையொட்டி கால்நடைகளை ஊரின் மையப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் அழைத்து வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில்களை திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மாடுகளை ஒன்றுசேர்த்து வழிபாடு நடத்துவதை ஊர் முக்கியஸ்தர்கள் தவிர்த்தனர். கால்நடை வளர்ப்பவர்கள் காலம் காலமாக தொன்று தொட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது என்பதால், தனித்தனியாக தங்கள் கால்நடைகளை கோயில் முன்பு நிறுத்தி வழிபாடு செய்து அழைத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியை காண ஏராளமானோர் சாலைகளில் காத்திருந்து ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர்.