×

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு: அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்

தஞ்சை: கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு அதற்குரிய விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று புவிசார் குறியீடு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவருமான சஞ்சய்காந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இருப்பினும் தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ”கும்பகோணம் வெற்றிலை”க்கு புவிசார் குறியீடு கேட்டு அதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்துள்ளோம். காவிரி ஆற்று படுகையில் விளைவதால் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது வெற்றிலை. அதிலும் கும்பகோணம் பகுதியில் இந்த வெற்றிலை சிறப்பாக விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை என பெயர் பெற்று விளங்குகிறது.

காவிரி படுகையில் திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. பூம்புகாருக்கு அருகே ராதாநல்லூரில் உள்ள சிவாலயத்தின் கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகள் ஆகியவற்றை கொண்டு கிபி.10-முதல் 14ம் நூற்றாண்டு காலத்திலிருந்தே காவிரி படுக்கையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை இந்த அகழ்வாராய்ச்சி உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபாடுடன் உள்ளது. இதற்காக கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தது.

தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு உள்ளது. கைவினைக் கலைஞர்கள் சரியாக பயன்படுத்தி “தோவாளை மாணிக்கமாலையை” உற்பத்தி செய்கிறார்கள். வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களை சம அளவில் கட்டுகிறபோது அது மாணிக்கம் போன்று தோற்றமளிப்பதால் மாணிக்கமாலை என பெயர் பெற்றது. இந்த தோவாளை மாணிக்கமாலையை கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Geographical code for Kumbakonam Betel, Tovalai Gemstone: Application for Recognition
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...