சென்னை : உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அடுத்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறகைளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை பரிசோதிக்க வேண்டாம். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை.
அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, விநியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.