சென்னை : ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வரும் முன்பாகவே தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் மருந்துப் பொருட்கள் அடங்கிய மருத்துவ தொகுப்பு இன்று முதல் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் தொற்று பாதித்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை குறித்து பல்வேறு நடைமுறைகள் தற்பொழுது பின்பற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் பரிசோதனை முடிவுகள் வரும்வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மாநகராட்சி தடவல் சேகரிப்பு மையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவிற்காக காத்திருக்கும் நபர்கள் வீடுகளில் இருக்கும் நேரங்களில் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு மாநகராட்சியால் இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
இந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜின்க், பாராசிட்டமால் ஆகிய மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் போன்ற மருத்துவப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும். எனவே கோவிட் தொற்று அறிகுறிகளுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவிற்காக காத்திருக்கும் நபர்கள் தொற்று பிறருக்கு பரவுதலை தடுக்கும் வகையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும் மாநகராட்சியால் வழங்கப்படும் மருந்து தொகுப்பிலுள்ள மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மாநகராட்சியின் தொலைபேசி ஆலோசனை மையங்களில் ஆலோசனை பெற்று முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.