×

மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் அதிரடி கைது: 3வது கல்யாணத்திற்கு தயாரானது அம்பலம்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(37). இவர் 2017ம் ஆண்டில் மருங்கூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது முதல் திருமணம் நடந்ததை மறைத்து, தனது பள்ளியில் படித்த மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மைனர் பெண் திருமணம் குறித்து தகவலறிந்த கடலூர் சமூகநலத்துறையினர் விசாரணை செய்தனர். இதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்தது தெரியவந்த நிலையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு பதிய பரிந்துரை செய்தனர். இதன்பேரில் வழக்கு பதியப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்யகூடாது என மாணவி தரப்பில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 4 வருடமாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. திருமணத்திற்கு பின்னர் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த மாணவி வீட்டிற்கு ஆசிரியர் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாணவி ஏன் வீட்டிற்கு வருவதில்லை என கேட்டபோது அவர்களுக்குள் பிரச்னை எழுந்துள்ளது. நாளடைவில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்துள்ளனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியும், தனக்கும் தனது மகளுக்கும் ஜீவனாம்சம் வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இது சம்பந்தமாக சமரசம் செய்தபோது உரிய இழப்பீடு வழங்கியதை மாணவி ஏற்றுக்கொள்ளாமல், தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் பேரில் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. இதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வள்ளி, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை கைது செய்தார். இவர் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Tags : Teacher who married student, arrested, 3rd marriage
× RELATED தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100...