×

'அமைதியை விரும்புவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு வேண்டாம்': ராணுவ தினத்தில் தளபதி எம்எம் நரவானே பேச்சு

டெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என தெரிவித்துள்ள ராணுவ தளபதி எம்எம் ஜெனரல் நரவானே இதை வைத்து யாரும் தப்புக்கணக்கு ஏதும் போட்டுவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தை ஒட்டி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் அமைதி நிலவ வேண்டுமென்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையிலிருந்து பிறந்தது என்றும், எனவே இந்நாடு குறித்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் விளக்கினார். இந்தியாவின் எல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும் என கூறிய ஜெனரல் எம்எம் நரவனே, இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர் என்றும், இந்திய எல்லையின் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், என்கவுன்ட்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது என ராணுவ தளபதி குறிப்பிட்டார். இந்திய ராணுவம் சமகால சவால்களை மட்டுமல்லாமல் எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ளும் வண்ணம் தயாராக இருப்பதாகவும், மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே நமது இந்திய ராணுவத்தின் சிப்பாய்களும், அதிகாரிகளும் பணிபுரிந்து வருவதாகவும் தளபதி நரவனே தெரிவித்தார். லடாக், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ராணுவ தளபதியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags : India ,Commander ,M Naravane ,Military Day , Peace, India, miscalculation. No, Commander-in-Chief, MM Naravane
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...