புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் இருந்து அசாம், கவுகாத்திக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மேற்கு வங்க மாநிலம்,ஜல்பைகுரி மாவட்டம் தொகுமோனி என்ற இடத்தில் வந்த போது ரயிலின் இன்ஜினில் இருந்து இணைக்கப்பட்ட ஒரு பெட்டி திடீரென தடம்புரண்டது. இதை தொடர்ந்து வேறு சில பெட்டிகளும் தடம்புரண்டன. மொத்தம் 12 பெட்டிகள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நேற்று மாலை 5 மணிக்கு விபத்து நடந்தது. மீட்பு பணி மற்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக ஒரு சிறப்பு ரயில் ஊழியர்கள், மருத்துவ பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்தார். இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ரயில் விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.