திருச்செந்தூர்: கொரோனா தொற்று 3வது அலை பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் இன்று (14ம் தேதி) முதல் 18ம் தேதி வரை கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தைப்பூசத்தை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் நேற்று படையெடுத்து வந்தனர். அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களின் கூட்டம் வந்தது.
இரவு 7 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. நெல்லை, பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருகப் பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி, பால்குடம் எடுத்தபடியும் நேர்த்திக்கடனை செலுத்த பாதயாத்திரையாக வந்தனர். தென்மாவட்டங்களில் இருந்து கார், வேன், பஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்த பக்தர்களும் சாமி தரிசனத்திற்காக குவிந்தனர். இதேபோல் கடற்கரையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீராடினர். இதனால் திருச்செந்தூர் நகரம், பக்தர்கள் வெள்ளத்தில் திணறியது.