பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட கோரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்று வந்த பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பெங்களுருவில் நடைபெற இருந்த பாதயாத்திரை நிறைவு விழாவுக்கு, கொரோனா காரணமாக அரசு அனுமதி தரவில்லை. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதயாத்திரை நிறுத்திவைப்பு தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதயாத்திரை நிறுத்திவைப்பு தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொரோனா பரவும் சூழ்நிலையில் இந்த பாதயாத்திரையை தடுக்க அரசு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக 14-ம் தேதி கர்நாடக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பாதயாத்திரைக்கு கர்நாடக அரசு அதிரடி தடை விதித்தது. தடையை மீறி பாதயாத்திரை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பாதயாத்திரை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பாதயாத்திரையை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.