சென்னை: பொது விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று மனுதாரருக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது.
கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் விடுமுறை நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் பொது விடுமுறை நாட்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடக்கோரி ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வழக்கை திரும்பப் பெருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.