திருப்புவனம்: திருப்புவனம் வாரச்சந்தையில்,பொங்கலை முன்னிட்டு நேற்று 2 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனையாகின. திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆடு, கோழி சந்தையும், அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும். திருப்புவனத்தை சுற்றியுள்ள 170க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வாரச்சந்தையில் தாங்கள் வளர்த்த ஆடு,கோழி, சேவல் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
பொங்கல் திருநாள் வருவதால் விவசாயிகள் பலரும் கால்நடைகளை விற்பனை செய்து விட்டு பொருட்கள் வாங்க வந்ததால் அதிகளவு கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. சுமார் 2 ஆயிரம் ஆடுகள் வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. பத்து கிலோ எடை கொண்ட ஆடு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கோழி, சேவல் வரத்து வெகுவாக குறைந்திருந்தது. பொங்கல் திருநாள் முடிந்த உடன் கிராமங்களில் கோயில்களுக்கு சேவல், கோழி பலியிடுவது வழக்கம். எனவே கோழி, சேவல் வரத்து வெகுவாக குறைந்திருந்தது. அதிகளவில் ஆடுகள் வரத்து இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.