அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் ஓதிச்சாமி (35). கொங்கு இளைஞர் பேரவை அமைப்பை சேர்ந்த இவர் அன்னூர் சுற்று வட்டார பகுதியில் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார். நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து வந்த போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை கண்டித்து நள்ளிரவு அன்னூரில் உள்ள அவரது உறவினர்கள், கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினர் மற்றும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீசார் ஓதிச்சாமியை நேற்று அதிகாலை விடுவித்தனர். விசாரணைக்கு அழைக்கும்போது உடனடியாக வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை போலீசார் விடுவித்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில் ‘‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியான பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை ஓதிச்சாமி மிரட்டியதாக புகார் வந்தது. இதையடுத்து விசாரிப்பதற்காக அவரை அழைத்துச் சென்றோம்’’ என்று தெரிவித்தனர்.