×

மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: மதுரையில் ரூ.114 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர் 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அயராது பணியாற்றியவர். சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் சண்டமாருதமாக முழங்கியவர். 13 முறை தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றவர். 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று அரிய பல சாதனைகளை நிகழ்த்தியவர். எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், படைப்பாளி, அரசியல், ஆட்சி என எல்லா துறையிலும் முத்திரை பதித்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘முத்தமிழறிஞர் கலைஞர்,  2010ம் ஆண்டில் கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, மதுரையில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணி துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், ரூ.99 கோடி மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கலைஞர் நினைவு நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடியும், தொழில் நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் ரூ.5 கோடியும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளி சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி துறை அமைச்சர்  எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி, தலைமை செயலாளர் இறையன்பு, பொதுப்பணி துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Artist ,Memorial ,Madurai ,Chief Minister ,MK Stalin , Rs 114 crore Artist Memorial Library in Madurai: Chief Minister laid the foundation stone of MK Stalin
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...