திருமலை: ஆந்திராவில் ஒமிக்ரான் பரவலை தடுக்க மாஸ்க் அணியாமல் பஸ்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ஆந்திராவில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒமிக்ரான் தொற்று 27 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று பரவலை தடுக்க விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது:
ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு விரைவில் அமல்படுத்தப்பட்ட உள்ளது. திரையரங்கு, மால்களில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஓட்டல்கள், வணிக வர்த்தக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 8ம்தேதி முதல் வரும் 16ம்தேதி வரை சங்கராந்தி (பொங்கல்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ₹50 அபராதம் விதிக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக நடத்துனரிடம் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் சிறப்பு ஆப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.