மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக 16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தற்போது ஊர்மக்கள், கமிட்டியினரிடம் ஆலோசனை நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் 16ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி திங்கட்கிழமை அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தற்போது அறிவித்துள்ளார். மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருந்தது. பார்வையாளர்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்திருந்தது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், உதவியாளர்கள் இவர்களுக்கு தனி சான்று தேவைப்படுமா? காவல்துறையினர் அவர்களுக்கு விலக்கு அளிப்பார்களா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.