திருமலை : ஆந்திராவில் ஒமிக்ரான் பரவலை தடுக்க முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்கு மற்றும் மால்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று 3ம் அலையாக நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மேலும், ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று 27 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்று பரவலை தடுக்க விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. அப்போது, முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஆந்திராவில் விரைவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்கு மற்றும் மால்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஓட்டல்கள், வணிக வர்த்தக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 8ம் தேதி முதல் வருகிற 16ம் தேதி வரை சங்கராந்தி (பொங்கல்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ₹50 அபராதம் வசூலிக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக நடத்துனரிடம் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் சிறப்பு ஆப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.