×

கோவையில் பயங்கரம்: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு கத்திக்குத்து...ஒருவர் உயிரிழப்பு..!!

கோவை: கோவை அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலாந்துறை அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர்களில் இரு பிரிவினரிடையே இரு தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அங்கு வந்த முன்னாள் மாணவர்கள் இரண்டு பேர், எதிர்தரப்பில் 3 பேரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

கத்தியால் குத்திய முன்னாள் மாணவர்கள் 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தலை, கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் என்ற மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Coimbatore , Coimbatore, school students, stabbing, fatality
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்