×

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை :அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் முகாம் நடைபெறும். மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்துதல் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை அளிக்கப்படும்.  சென்னையில் 21 ஆயிரம் பேர் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.  வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையம் வரலாம்.

சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவர்கள் தினமும் போன் செய்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர்  தரப்பட்டுள்ளது,  தனிமைப்படுத்துதல் உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும். 3வது அலையை பொறுத்தவரை தீவிர சிகிக்சை என்பது குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் சோதனைக்கு வரும் மாதிரிகளில் 85% ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படுவதால் மரபணு பரிசோதனை கைவிடப்படுகிறது. 100 பேருக்கு கொரோனா உறுதியானால் 85 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களின் அருகிலேயே மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்றார்.


Tags : Pongal festival ,Tamil Nadu ,Minister ,Ma. Subramanian , அமைச்சர் மா.சுப்பிரமணியன்
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...