சென்னை: மாமல்லபுரம் அருகேயுள்ள பட்டிப்புலம் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ் இருளர் இன சமுதாய மாணவர்களுக்காக, அரசு உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தப்படுகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை காரியன் தெருவை சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் 11ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தன் பெற்ேறாருக்கு போன் செய்து ஊருக்கு அழைத்து செல்ல கூறினார். இதையடுத்து, பெற்றோர் கடந்த டிசம்பர் 24ம் தேதி மகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த மாணவி கடந்த 7ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவியின் தாய் கார்த்திகா (40), கடந்த 8ம் தேதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் அந்த மாணவி பயின்ற பள்ளிக்கு நேரில் வந்து, மாணவியின் வருகை பதிவேடு, மாணவியை பெற்றோர் எப்போது அழைத்து சென்றனர், மாணவியின் நடத்தை குறித்து தலைமையாசிரியர், விடுதி வார்டன் மற்றும் ஆசிரியர்களிடம் 1 மணி நேரம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.