தூத்துக்குடி: தூத்துக்குடியில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார், ரூரல் ஏஎஸ்பி சந்தீஷ் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதூர் பாண்டியாபுரத்தில் செயல்படும் குடோன் மற்றும் லாரி ஷெட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு டாரஸ் லாரியில் கடத்தி வரப்பட்டு ₹10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து செம்மரக் கட்டைகளை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு சுமார் 20 மெட்ரிக் டன் எடையிலான 100 செம்மரக்கட்டைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவலறிந்து தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், பறிமுதலான செம்மரக்கட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து இந்த செம்மரக்கட்டைகள் லாரியில் கடத்தி வரப்பட்டதும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரி ஷெட் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.