மெல்போர்ன்: ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டி ஜன.17ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் நெம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச்(செர்பியா) தடுப்பூசி போடாமல் மெல்போர்ன் போய்ச் சேர்ந்தார். ஊசி போடததற்கான சான்றிதழை ஏற்காத ஆஸ்திரேலியா அரசு, அவரது விசாவை ரத்து செய்தது. கூடவே இதே பிரச்னையால் 34பேர் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் ஜோகோவிச்சை தடுப்புக் காவலில் வைத்தது. ஆஸியின் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில் ஆஸி நீதிமன்றதில் ஜேகாகோவிச் வழக்கு தொடர்ந்தார்.
நேற்று நடந்த ‘ஆன்லைன்’ விசாரணையின் போது, ‘தங்கள் நடவடிக்கையை திரும்ப பெறுவதாக ஆஸி தெரிவித்துள்ளது’ என்று கூறிய நீதிபதி, ‘ 30 நிமிடங்களில் ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும். அவர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதனையடுத்து ஆஸியில் உள்ள செர்பியர்கள், ஜோகோவிச் ஆதராவாளர்கள் உற்சாக கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு ஆஸிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் ஆஸியின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக், ‘அரசு தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜேகாவிச்சை இப்போதும் வெளியேற்ற முடியும்’ என்று கூறியுள்ளார். அதனால், ‘ஜோகோவிச் விளையாடுவாரா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்தால் ஜோகோவிச் மீது 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்க நேரிடும்.