×

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் விவகாரத்தை விசாரித்த நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

சென்னை: நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து, கடந்த அதிமுக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்த நிலையில், அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுநருக்கு அனுப்பி விட்டோம். அதை சூரப்பாவிற்கு தர இயலாது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் அவர் முடிவெடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ‘அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது? வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால் தான் சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும். அறிக்கை வழங்க மறுக்க முடியாது’ என்றார். அப்போது அரசு தரப்பில், ‘வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமானது. அரசியலமைப்பு சட்ட பணி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது சூரப்பா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘விசாரணை ஆணையம் அமைக்கபட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்
படவில்லை’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Tags : Anna University ,Judge ,Kalaiyarasan Commission , Anna University, Former Vice-Chancellor, Judge Kalaiyarasan, Adjournment
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...