ஆஸ்திரேலியா: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டதை நிறுத்தி அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மெல்போனில் வரும் 17ம் தேதி தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க வந்த பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றை சமர்பிக்காததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது விசாவை ரத்து செய்த அதிகாரிகள், மெல்போனில் உள்ள தனியார் விடுதியில் அவரை தங்க வைத்தனர்.
இதையடுத்து மெல்போன் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஜோகோவிச்சின் மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாவை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என்று தீர்பளித்துள்ளனர். மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதியும் அளித்துள்ளனர். தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜோகோவிச், விரைவில் விடுவிக்கப்படுவார் என்றும் அவரிடம் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.