ஊட்டி : ஊட்டி - மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் பல இடங்களில் செர்ரி மலர்கள் பூத்துள்ளதால், இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஜப்பான் நாட்டின் தேசிய மலரான ‘செர்ரி’ மரங்கள் அதிகளவு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. குளிர் அதிகமாக நிலவும் இடங்கள், குறிப்பாக சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. அக்டோபர் மாதங்களில் பூக்க துவங்கும்.
பனிக்காலங்களான நான்கு மாதம் இந்த மலர்களை காண முடியும். தற்போது பல இடங்களில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகிறது. வேலிவியூ, கைகாட்டி, தேவர்சோலை மற்றும் லவ்டேல் போன்ற பகுதிகளில் பூத்துள்ளன. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.