புதுடெல்லி: முஸ்லிம் பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுடைய படங்களை ‘புல்லிபாய்’ என்ற செயலியில் வெளியிட்ட வழக்கில் அசாமை சேர்ந்த நீரஜ் பிஷ்னோய் என்ற இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதே போன்று இன்னொரு செயலியான ‘சுல்லிபாய் டீல்ஸ்’ என்ற ஆப்-ஐ உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்குர்(26) என்ற வாலிபர் மத்திய பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் ஓம்காரேஷ்வரை நேற்று இந்துாரில் டெல்லி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுல்லி டீல்ஸ் ஆப்பை உருவாக்கியதை ஓம்காரேஷ்வர் ஓப்புக் கொண்டார். இவர் இந்துாரில் உள்ள ஐபிஎஸ் அகாடமியில் பிசிஏ படிப்பை படித்துள்ளார். முஸ்லிம் பெண்களை களங்கப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படங்களை அந்த குழுவில் பலர் ஷேர் செய்துள்ளனர்,’’ என்றனர்.