ஸ்ரீகாளஹஸ்தி: கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சானிடைசர் பயன்படுத்தியும் தரிசனம் செய்ய வேண்டும். தற்போது கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரானும் அதிகரித்து வருவதால் மாநில அறநிலையத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்- ஞானபிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதியில் பக்தர்கள் தரிசிக்க இன்று(நேற்று) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.