பீஜிங்: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல், ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் (ஏஐஐபி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ரகுராம் ராஜன் ஓய்வு பெற்ற பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றவர் உர்ஜித் படேல். இவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பாக கடந்த 2018ம் ஆண்டு. சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், உர்ஜித் படேல் தற்போது ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக இருந்த டி.ஜே. பாண்டியனின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அந்த பதவியில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள். அடுத்த மாதம் அவர் பொறுப்பேற்க உள்ளார். ஏஐஐபி வங்கி சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன் வழங்கி வருகிறது. இந்த வங்கியை உருவாக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளையும், இந்தியா, 7.5 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.