புதுடெல்லி: ஜிஎஸ்டிஆர் 3பி-ல் தாமதமாக செலுத்தப்படும் மாதாந்திர வரிக்கான வட்டியை கணக்கிட விரைவில் கால்குலேட்டர் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஜிஎஸ்டியில் பதிவு செய்த அனைத்து வர்த்தகர்களும் தங்களின் மாதாந்திர பரிவர்த்தனை மற்றும் வருமானத்தை சுருக்கமாக தெரிவிக்க ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதில் வரி செலுத்துவோர் ஒவ்வொரு மாதமும் வணிக கொள்முதல் மற்றும் விற்பனையின் மொத்த மதிப்பை பட்டியலிட வேண்டும். இதில் தாமதமாக செலுத்தப்படும் வரிக்கு 18 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டிஆர் 3பி-ல் தாமதமாக செலுத்தப்படும் வரிக்கான வட்டியை கணக்கிட கால்குலேட்டர் வசதி செய்யப்பட இருப்பதாக ஜிஎஸ்டிஎன் தகவல் வெளியிட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் படிவத்தை தரும் மதிப்புகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வட்டியை கணக்கிடும். இதன் மூலம், வரி செலுத்துவோர் சுயமதிப்பீடு செய்து கொள்வது எளிதாகும். இந்த செயல்பாடு விரைவில் ஜிஎஸ்டி இணையதளத்தில் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.