அவனியாபுரம்: மதுரை வில்லாபுரம் சாலையில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள், தங்களை போலீசார் என அறிமுகம் செய்து, தனியாக செல்லும்போது நகைகளை அணிந்து செல்லாதீர்கள் என்று கூறி நகையை கழற்றி வாங்கி பேப்பரில் மடித்துக் கொடுத்தனர். சுதாரித்த பெண் பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அதில், கற்கள் மட்டுமே இருந்தன. உடனே அவர் கூச்சலிட, சப்தம் கேட்டு ரோந்து சென்ற தனிப்படை எஸ்ஐ ஓடி வந்தார். அதற்குள் மர்ம நபர்களில் ஒருவர் டூவீலரில் தப்பினார். மற்றொருவரை எஸ்ஐ விரட்டிச் சென்று பொதுமக்கள் உதவியுடன் பிடித்து அவனியாபுரம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதில், அவர் பெயர் முகமது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நகை பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்ணிடம் நகை திருட முயன்றவரை எஸ்ஐ விரட்டிச்சென்று பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.