திருவனந்தபுரம்: கேரளாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வருகின்ற போதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த மாட்டாது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே கொரோனா முதன் முதலில் கேரளாவில்தான் கண்டறியப்பட்டது. பின்னர் படிப்படியாக மற்ற மாநிலங்களில் பரவ தொடங்கியது. தொடர்ந்து முதல் அலை மற்றும் 2வது அலைகள் வீச தொடங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பல மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பறிபோனது. பின்னர் தொற்று குறைய ஆரம்பித்தது. தமிழகம், டெல்லி, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது. பின்னர் முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும் கேரளாவில் மட்டும் கொரோனா குறையாமல் இருந்தது. பின்னர் ஒரு வழியாக அங்கும் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தென்னாப்பிரிக்கா நாட்டில் கொரோனா உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் வைரஸ் ஒருவருக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது. தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி விட்டது.
தமிழகத்தில் தினசரி ஆயிரத்திற்கும் குறைந்திருந்த நிலையில், நேற்று தொற்று பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஞாயிறு முழு ஊரடங்கும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கேரளாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் தான் 5 ஆயிரத்தை கடந்து இருந்தது. பின்னர் படிப்படியாக ஆயிரத்தை தொட்ட நிலையில் நேற்று 5296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5000 தாண்டுவது இதுவே முதல் முறை. நேற்றைய ெதாற்று சதவீதம் 8.2 ஆகும். நேற்று 135 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் மரணம் எண்ணிக்கை 49305 பேராக உயர்ந்துள்ளது. இதுபோல் கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 25 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இதில் 186 பேர் நோய் பரவல் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் கேரளாவில் இதுவரை இரவுநேர ஊரடங்கோ, கடும் கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன, முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் அடுத்து முழு ஊரடங்கு வருமோ என்ற அச்சத்தில் ேகரள மக்கள் உள்ளனர். இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் கூறியதாவது: கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நிபந்தனைகளை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் இப்போதைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை. இதன் மூலம் பொதுமக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கும். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பதால் வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் கட்டாய வீட்டு தங்கலில் இருக்கவேண்டும். 8வது நாள் ஆடிபிசிஆர் பரிசோதனை நடத்தவேண்டும். நோய் பரவல் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தான் அதிக அளவு ஒமிக்ரான் பரவியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் உடனே ஒமிக்ரான் பரிசோதனையும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.