×

பொங்கல் பண்டிகைக்கு வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா?: கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட தாலுகாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் முந்தைய காலங்களில் பொங்கல் விழாவில் கரிநாளன்று வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. வனப் பகுதிக்கு கிராம மக்கள் சென்று நரியை பிடித்து, கோயிலில் வங்காநரியுடன் சுற்றிவந்து அதன் முகத்தை பார்த்து தரிசனம் செய்தால் வருடம் முழுவதும் நல்ல மழை பொழியும், செல்வம் கொழிக்கும், நோய், நொடியின்றி வாழ வழி காட்டும் என்ற முன்னோர்கள் ஐதீகப்படி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தி வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக இதனை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டவாடி, ரங்கனூர், சின்னமநாயக்கன்பாளையம், குறிச்சி, தாண்டானூர், சின்னகிருஷ்ணாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம், வடுகத்தம்பட்டி, எடப்பட்டி, வில்வனூர், தும்பல், பனைமடல், சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி, பழனியாபுரம், திம்மநாயக்கன்பட்டி, படையாட்சியூர், ஏத்தாப்பூர், மல்லியகரை, அபிநவம், ஆரியபாளையம், வேப்பிலைப்பட்டி, கோபாலபுரம் உள்பட பல கிராமத்தில் பொங்கல் திருவிழாவை கொண்டாடும் வகையில் வங்காநரி விடுவது வழக்கமாக இருந்தது. அண்மைகாலமாக இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வங்காநரி பிடித்து வழிபாடு நடத்தக்கூடாது என கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் பாரம்பரிய வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலைக்கு கடந்த சில ஆண்டுகளாக தள்ளப்பட்டு வேதனைக்குள்ளாகி வருவதாக தெரிவிக் கின்றனர். பாரம்பரியமான வழிபாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது, இந்த ஆண்டு வங்காநரி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vanganari Jallikkattu ,Pongal festival , Pongal Festival, Vanganari Jallikattu, Permission, Expectation
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா