மதுரை: மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு நூதன முறையில் கடத்த இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸில் இலங்கைக்கு போதை பொருட்களை கடத்தவிருப்பதாக மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் இலங்கைக்கு செல்லும் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது வில்லாபுரத்தை சேர்ந்த 28 வயது ஷகீல் அகமது என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது அவர் எடுத்துசெல்லவிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ் டேங்கிற்குள் போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஷகீல் அகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பில் இருந்த பொருள் தன்னுடையது இல்லை எனவும் விமானநிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் இலங்கையில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பொருட்களை கொடுத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு கடத்த இருந்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பில் ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.