சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:யுபிஎஸ்சி மெயின் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படும் என்பதால், பணி நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடுவார்கள். இந்நாட்களில் தேர்வு நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாட்டில் கைவைக்கும் செயல்.ஒமிக்ரான் பரவல்
அதிகரிப்பால் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, தேர்வர்களின் நலனை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு, உடனே தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்.
பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த அஞ்சல்துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தமிழை கொண்டாடுவதாக நாடகம் நடத்தும் ஒன்றிய அரசு தமிழர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் பொருட்படுத்துவதே இல்லை. ஒன்றிய,மாநில அரசுகள் போட்டி தேர்வுகளுக்கான தேதிகளை நிர்ணயம் செய்யும்போது, விழாக்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒன்றிய அரசு தேர்வர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, யுபிஎஸ்சி மெயின் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்.