புதுடெல்லி: அதிகரித்து வரும் வெறுப்பு உணர்வு பேச்சுகள், மத ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும்படி பிரதமர் மோடிக்கு ‘ஐஐஎம்’ கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் வெளிப்படையாக கடிதம் எழுதி உள்ளனர்.இது குறித்து பெங்களூர் மற்றும் அகமதாபாத் ‘ஐஐஎம்’ (இந்திய மேலாண்மை கல்லுாரி) கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 183 பேர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் சமீபத்தில் நடந்த மத கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக போரிட இந்துக்கள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்து மத தலைவர்கள் பகிரங்கமாக பேசியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒருவர் தனது மத நம்பிக்கையை கவுரமாக பின்பற்ற அரசியல் சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் இப்போது ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது. வட இந்தியாவின் சில இடங்களில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல்கள் அனைத்தையும் பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமலும், எந்தவித அச்சம் இன்றியும் செய்துள்ளனர்.இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் நீங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது, வெறுப்புணர்வை துாண்டுபவர்களுக்கு தைரியம் அளிப்பதோடு, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். இதுபோன்று பிரிவினையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உங்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.