சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறை பணியாளர்களையும், கைதிகளையும் முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாகவும், சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள சிறைகளில் தற்போது 13,854 கைதிகள் உள்ளனர். மொத்த 23,592 கைதிகளில் இது 58.72 சதவீதம் தான். 1295 சிறைக் கைதிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 38 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இது தவிர சிறைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.அப்போது நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் வைகை ஆஜராகி, கைதிகள் மட்டுமின்றி சிறை பணியாளர்கள் 700 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தகான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தமிழக அரசின் அறிக்கையில், கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறைகளில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களையும், சிறை ஊழியர்களையும் முன்கள பணியாளர்களைப்போல் கருதி முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் புதிதாக தொற்று பாதிப்பு அதிகமானால், சிறை கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….
The post சிறை ஊழியர்கள், கைதிகளை முன்களப்பணியாளர்களாக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.