×

5 மாநில தேர்தல்: டிஜிட்டல் முறையில் தேர்தல் பரப்புரை, ஆன்லைனில் வேட்பு மனு, பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் : தேர்தல் ஆணையம் அதிரடி!!

டெல்லி : அரசியல் கட்சிகள் முடிந்தவரை டிஜிட்டல் முறையில் தங்களின் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.கொரோனா, ஓமிக்ரான் பரவும் சூழலில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானது. கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும்; பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். 5 மாநில தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அனுமதிக்கப்படும்.

5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் பங்கேற்பர். அவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள். 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள்.கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும். தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும்.சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.இ- விஜில் என்ற செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்களை அளிக்கலாம்.

உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி வழங்கப்படுகிறது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,தேர்தலை தள்ளிவைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 5 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலை காரணம் காட்டி, மதுவோ அல்லது பணமோ அன்பளிப்பாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.

வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும்.ஜனவரி 15ம் தேதி வரை பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஊர்வலத்திற்கு தடை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. , என்றார்.


Tags : 5 ,Election Commission , அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகள் ,தேர்தல் ஆணையர் ,சுஷில் சந்திரா
× RELATED இன்று மாலை 5 மணிக்குள் அரசியல் விளம்பரங்களை அகற்ற தேர்தல் கமிஷன் கெடு