×

விருதுநகர் அருகே தனியார் பாரை சேதப்படுத்திய 50 பேர் மீது வழக்கு

சிவகாசி: விருதுநகர் அருகே தனியார் பாரை உடைத்து சேதப்படுத்திய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜமுனியசாமி. இவர் வெம்பக்கோட்டை ஒன்றியம், அன்னபூரணியாபுரம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு மதுபாருடன் கூடிய கேளிக்கை விடுதி துவக்க முயன்றார். இதற்கு இப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து அனுமதி பெற்று பாரை ராஜமுனியசாமி திறந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த பாரை மூட கோரி, மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்காத நிலையில் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்த பின்னர், ராஜமுனியசாமி பாரை அடைத்து விட்டு சென்றார். இதனையடுத்து நள்ளிரவு 11.45 மணியளவில் பாருக்குள் நுழைந்த 50க்கும் மேற்பட்டோர், அங்கிருந்த சேர், டேபிள், சிசிடிவி கேமராக்கள், 60க்கு மேற்பட்ட மதுபான பாட்டில்கள் மற்றும் 2 டூவீலர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். புகாரின்பேரில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் 50 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Virudhunagar , Virudhunagar, private bar, damaged, 50 persons, case
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...