திருச்சி:ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த 6ம்தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்றுமுன்தினம் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
உயர் பாதுகாப்பு தொகுதி எண் 2ல் அறை எண் 4ல் ராஜேந்திர பாலாஜி அடைக்கப்பட்டார். ஏற்கனவே இங்கு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பாதுகாப்பு காரணமாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராஜேந்திர பாலாஜி உணவு மற்றும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு நன்கு தூங்கினார். நேற்று காலை கைதிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவான தயிர்சாதம், புளிசாதம், மதியம் சாம்பார் சாதம் சாப்பிட்டார்.