திருமலை: ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக, முதன்மை செயலாளர் சமீர்ஷர்மா தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின்படி, அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தி கடந்த 1ம் தேதி முதல் நடைமுறை படுத்தப்படும். இந்த முடிவால் அரசுக்கு ரூ.10,247 கோடி கூடுதல் சுமை ஏற்பட உள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட உள்ளது. கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் 30ம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். ஜெகன் அண்ணா ஸ்மார்ட் டவுன்ஷிப்ஸ்- லே அவுட்களில் 10% மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். வீடற்ற அரசு ஊழியர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.