சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பெறுவதற்கு சேவை பெறும் உரிமைச் சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி, அரசு மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராத தொகையானது சேவைத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படவும், குறித்த காலத்திற்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கீழ்க்கண்ட சேவைகள் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளும் விண்ணப்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிடப்பட்ட நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதனால் அரசின் சேவைகள் எப்போது கிடைக்கும் என்று நாள் கணக்காக, மாதக்கணக்காக மக்கள் காத்திருப்பது தடுக்கப்படும். தமிழக அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும். 2022ம் ஆண்டின் முதல் சட்டமன்றத் தொடரின் இறுதி நாளான இன்றே அதை செய்தால் மிகுந்த பாராட்டுக்குரிய செயலாக அது இருக்கும்.