×

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி விஜய் சேதுபதி மனு: ஐகோர்ட்டில் 11ம் தேதி விசாரணை

சென்னை: தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.

எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், எனது சாதியையும் பற்றி தவறாக பேசினார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பியுள்ளார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், ஜனவரி 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய் சேதுபதிக்கு  சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் விஜய் சேதுபதியும் அவரது மேலாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத் தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளன.

விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்று வாதிட்டார்.மகா காந்தி தரப்பில் வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ் ஆஜராகி, நோட்டீஸ் வந்ததால்தான் பதில் மனுதாக்கல் செய்தோம். விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல விஜய் சேதுபதியும் அவரது மேலாளரும் மனுதாரரை திட்டி தாக்கியதால்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணைக்காக ஜனவரி 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Tags : Vijay Sethupathi , Vijay Sethupathi's petition to quash defamation case against him: 11th hearing in I-Court
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்