மதுரை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லையில் தேமுதிக சார்பில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டேன். அப்போது, ஓட்டுக்கு பணம் வாங்கும் போது, ஒரு ஓட்டுக்கு குறைந்தது ரூ.1 லட்சமாவது வாங்க வேண்டுமென வாக்காளர்கள் பணத்தை வாங்கத் தூண்டும் வகையில் நான் பேசியதாக தாசில்தார் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், நெல்லை டவுன் போலீசார் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் கருத்தை குறிப்பிடவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.