கோவை: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் நர்சாக உள்ளார். இவர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜெயக்குமார்(44). 2002ம் ஆண்டு பேட்ச்சில் காவலராக பணியாற்றினார். தற்போது அவர் பணியில் இல்லை. எங்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், அவர் தொடர்ந்து என்னை மனரீதியாக டார்ச்சர் செய்ததால் கடந்த 3 ஆண்டாக அவரை பிரிந்து நீலகிரியில் தனியாக வசித்து வருகிறேன்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் ஆபாச படத்தில் நடித்துள்ளதாக அபாண்டமாக குற்றஞ்சாட்டினார். மேலும் கோவை காந்திபுரம் வந்தால் அந்த வீடியோவை காட்டுவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான நான் கோவை வந்தேன். அப்போது ஜெயக்குமார் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி கழுத்தை நெரித்து தாக்கினார். என் மீது பொய் குற்றச்சாட்டு கூறி தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதும், கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.