சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 3-வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் இன்று 2-வது நாள் கேள்வி - பதில் நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்துக்கழகம் அமைக்க உறுப்பினர் மார்க்கண்டேயன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்க்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், விளாத்திகுளத்தில் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் சாமந்தன்பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவு அரசு அமைக்குமா? என்று உறுப்பினர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூண்டில் வளைவு அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சாமந்தன்பேட்டையில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கூறினார்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500 ஆக உயர்த்த அரசு முன்வருமா? என்று உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராமசந்திரன், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500 ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது என தெரிவித்தார்.
சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? என்று உறுப்பினர் ராஜா கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் காந்தி, சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். இதனை அடுத்து சட்டசபையில் கேள்வி - பதில் நேரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.