புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் அளித்த பேட்டி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மால்கள், சந்தை வளாகங்களில் போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்து 50 சதவீத பணியாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும். மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதிக்கப்படும். திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. பியூட்டி பார்லர், சலூன்கள், ஸ்பாக்கள், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். கோயில்களின் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் பக்தர்கள் பங்கேற்பின்றி அர்ச்சகர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிக்கல்வி இயக்குநரகம், உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், கோவிட் -19 நடைமுறைகளின்படியும் செயல்படும். இந்த கட்டுப்பாடுகள் இன்று(7ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.