செங்கல்பட்டு: சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் கிருத்திகா (23). செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். இவருடன் கடலூர் மாவட்டம், எஸ் புதூரை சேர்ந்த ரத்தீஷ் (23) என்பவரும் 3ம் ஆண்டு படிக்கிறார். ஒரே கல்லூரியில் படித்து வந்த இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் ரத்தீஷ், கிருத்திகாவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோதும், நேரில் சந்தித்தபோதும் கிருத்திகாவை தவிர்த்து வந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, இருவரையும் அழைத்து விசாரித்தார். இதில், கிருத்திகாவின் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என கூறி ரத்தீஷை, போலீசார் விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிருத்திகா, புகாரின்படி போலீசார் விசாரிக்காமல், ரத்தீஷை விடுவித்ததை கண்டித்து, நேற்று முன்தினம் இரவு அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் சமரசம் பேசி, மீண்டும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர், வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.