சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தான்தான் என்று வதந்தி பரப்பியதாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுமக்கள் மத்தியில் சசிகலா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். கட்சியின் உறுப்பினரே அல்லாத அவர் கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்திவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி எம்ஜிஆரின் சமாதிக்கு அதிமுக கொடியுடன் சென்ற சசிகலா அங்கு தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று பேட்டி அளித்துள்ளார். இதனால், சசிகலா மீது மோசடி, வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதியுமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.