சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஊழியர்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. நடப்பாண்டில் கரும்பு மகசூல் அதிகரித்ததையடுத்து 60,000 டன் பதிவு செய்யப்பட்ட கரும்புகளும், 17,000 டன் பதிவு செய்யப்படாத கரும்புகளும் அரவைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆலையின் பராமரிப்பு செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன்பணம் ஆகியவற்றிற்கு பத்து கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஆலை ஊழியர்களின் ஊதியத்திற்கு ரூ.11 கோடியே 16 லட்சம் தேவைப்படுவதாகவும் ஆலை நிர்வாகம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலையை இயக்குவதன் மூலம் 10,000 கரும்பு விவசாயிகளும், 500 தொழிலாளர்களும் நேரடியாக பயன் பெறுவர் என்பதோடு, கரும்பு வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி இயக்குபவர்களும், அதை சார்ந்த தொழிலாளர்களும், விவசாய கூலித் தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் பயன்பெறுவார்கள். எனவே, கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, மதுரையில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.