சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 30 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் 25ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.