டெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு இந்த மாதம் ரூ.183.67 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை விடுவித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. தமிழகத்துக்கு 2021- 2022-ல் இதுவரை ரூ. 1,836.67 கோடியை ஒன்றிய அரசு விடுத்துள்ளது.
வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.9,871 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது தவணையாகும். தகுதி வாய்ந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.98,710 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவின்படியும், வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மாதம் தோறும் இந்தத் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.